கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்த பெண்ணின் புகைப்படத்தை மட்டும் மார்பிங் செய்து தொல்லை கொடுத்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.
இதனை கண்ட ஆசாமி அவரின் மனைவியின் படத்தை மட்டும் தனியாக பிரித்து மார்பிங் செய்து தவறாக சித்தரித்து முகநூலின் ஒரு பக்கத்தில் பதிவிட்டள்ளான்.
இதனை பார்த்த கணவர் – மனைவி அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த பக்கத்தின் அட்மினை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர் விபரத்தைக் கூறி அப்படத்தின் நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதனை நீக்கிய அந்த நபர் மற்றொரு முகநூல் பக்கத்தில் அதே படத்தை பதிவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளிப்பதாக கூறியபோது, எதிர்தரப்பில் பேசிய மார்பிங் மேன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் உன் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் இன்னும் சில படங்கள் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மனைஉளைச்சல் அடைந்த அப்பெண்ணின் கணவர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமாரிடம் புகார் அளிக்க, அவர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் அந்த முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில் மயிலாடுதுறை காமராஜர் சாலையை சேர்ந்த 28 வயதான சிவா என்பவரை தனிப்படை போலீசார் மூலம் பிடித்து விசாரித்தனர். அப்போது பொறியியல் பட்டதாரியான சிவாவுக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது
இதுபோன்று பல பெண்களுக்கு மிரட்டல் விடுத்து வந்ததும், இதனையே அவர் வழக்கமாகக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி சிவாவின் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். பாதிக்கப்பட்ட தம்பதியர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
இதுபோன்ற புகார்களுக்கு 9489919722 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், புகார் கொடுப்பவர்கள் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.