ராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது!
ஆண்டாள் கோவில் ஜீயர், அமைச்சர் திறந்து வைத்தனர்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாகவும், ஊரின் அடையாளமாகவும் இருந்து வந்தது பண்ணையார் ஆர்ச் என்ற சுதந்திர நினைவு சின்னம்.
கடந்த ஆண்டு கனரக வாகனம் மோதி, இந்த நினைவு வளைவு சேதமடைந்தது. சேதமடைந்த நினைவுச் சின்னத்தை ராஜபாளையம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். பல மாதங்களாக நடந்த பணிகள், பல லட்ச ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட இந்த பண்ணையார் ஆர்ச் என்ற சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு வளைவை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் திறந்து வைத்தார்கள்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, சுதந்திரப் போராட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பலரின் தியாகம் உள்ளது. சென்னை மாகாண முதல்வராக ராஜபாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி ராஜா மிகச்சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்.
சுதந்திரப் போராட்டங்களிலும் ஏராளமானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர், விருதுநகர் மாவட்டம் சுதந்திரத்தின் அடையாளமாக உள்ளது என்று பேசினார்.
மேலும் ஆங்கில மருந்துகள் ஆபத்து காலங்களில், அவசர கால மருந்தாகத்தான் செயல்படும். ஆயுர்வேத மருந்துகள், நம் ஆயுள் உள்ளவரை செயல்படும், தற்போதைய தொற்று நோய்க்கு பெரும்பாலானவர்கள் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அதன் பலன்களும் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு வளைவு, பண்ணையார் ஆர்ச் திறப்பு விழாவில் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை