- இருக்கண்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா….
- பக்தர்கள் வசதிக்காக ஆன்லைனில் நேரடி ஔிபரப்பு…..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கண்குடி மாரியம்மன் கோவில். இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதாந்திர வெள்ளியன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடித்திருவிழாவில் அம்மனை தரிசிப்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள், இருக்கண்குடிக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு வைரஸ் தொற்று காரணத்தால், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலர்கள், பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டு ஆடித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
இன்று ஆடித்திருவிழாவின் முக்கிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்று உற்சவர் அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே அன்னையின் தரிசனம் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் இணையதளத்திலும், யூடியூப்பிலும் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
செய்தி: ரவிச்சந்திரன், மதுரை