இன்று ஆடிமாத கடைசி வெள்ளிக் கிழமை என்பதால் தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மன் கோவில்கள் காலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் ஏராளமாக உள்ளன. விருதுநகர் பராசக்தியம்மன் கோவில், சிவகாசி மாரியம்மன் கோவில், சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில், எம்.புதுப்பட்டி மாசாணியம்மன் கோவில் என பல அம்மன் கோவில்களுக்கும், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஊரடங்கு காரணமாக பிரபலமாக உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. கோவில்களுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும், கோவில்களின் கோபுர வாசல்கள் முன்பு நின்று மக்கள் சாமி கும்பிட்டு வருகின்றனர்.
சிவகாசி மாரியம்மன் கோவில் பிரதான கோபுரவாசலில் நின்று, மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கோவிலின் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் வழங்கிய பால், இளநீர், மஞ்சள், தயிர், பஞ்சமிர்தம் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் மாரியம்மனுக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பக்தர்கள் கோபுர வாசலில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கையும் வழங்கினார்கள்.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் வாசலில் வைத்து பொங்கலும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை