பாரத நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி.
தற்போது நாடெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுதந்திர தின விழா எளிய முறையில் நடைபெற்றது. முக்கிய விவிஐபி.,க்கள் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அனைத்து நுழைவு வாயில்களிலும், தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2014இல் பிரதமராக அடியெடுத்து வைத்த மோடி, தற்போது 7வது முறையாக தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார். பின்னர் தற்சார்பு பாரதத்தை வலியுறுத்தி, நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.
முன்னதாக, தில்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கமாக முதலில் தேசப் பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, பின்னர் குதிரைப்படை அணிவகுப்புடன் வந்தார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு செயலர் அஜய்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
முப்படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர், 21 குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து தற்சார்பு பாரதத்தை வலியுறுத்தி, நாடு சொந்தக் காலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்தினார் பிரதமர் மோடி. உலகத்தை இந்தியா வழிநடத்த வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்தி பிரதமர் மோடி பேசியவை…
இந்தியா தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்! நான் உறுதியாகச் சொல்கிறேன் இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்! நம் நாடு தன்னிறைவு பெறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். நமது தன்னம்பிக்கையே நாடு முன்னேறுவதற்கான வழி.
இளைஞர்கள் 20 வயதில் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இந்தியா சொந்த காலில் நிற்க வேண்டும்.
இந்தியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. பொருளாதார வளர்ச்சியுடன் மனிதத் தன்மையையும் மையமாக வைத்து செயல்பட வேண்டும். உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் ..
இந்திய விவசாயிகள் உலகுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். நமது விவசாயத்துறையின் கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டியுள்ளது. நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன. அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது!
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது. நாமே இப்போது வெண்டிலேட்டர்களை அதிக அளவில் தயாரிக்கிறோம்.
வங்கித்துறை முதல் விண்வெளித்துறை வரை, பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளோம்! உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதே இனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம்
இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற ஒற்றுமை உணர்வோடு இந்தியா முன்னேறுகிறது!
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தன்னிறைவு மூலம் எட்டப்படும்! தன்னிறைவு பாரதம் என்ற லட்சியம் உண்மையாகும். தற்சார்பு பாரதம் என்பதன் மூலம் நாம் நம் ஆற்றலை வெளிப்படுத்துவோம். நம் கனிம வளங்களை கொண்டே உற்பத்தியும் செய்ய வேண்டும். அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என இப்போது உறுதிமொழி எடுக்க வேண்டும்!
தன்னிறைவு பாரதம் என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும்! நமது கலாசாரம், பாரம்பரியத்திற்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது என்று பேசினார் பிரதமர் மோடி.