ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தாசில்தார் ஒருவரின் வீட்டில் ரூ 1.10 கோடி பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாசில்தார் பாலராஜ் நாகராஜ் மீது பல புகார்கள் வந்த நிலையில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாக நேற்று இரவு அவரது வீட்டில் சோதனை நடத்தினர்
இந்த சோதனையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.10 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி 28 ஏக்கர் நிலம் கொண்ட பத்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தாசில்தாரை அடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆர்.ஏ.ஓ வீட்டிலும் அதிரடியாக ஊழல் தடுப்புப் பிரிவினர் ரெய்டு செய்தனர்.
அவரது வீட்டிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று இரவு முதல் தாசில்தார் வீட்டில் ரெய்டு நடந்து வருவதாகவும் அது இன்றும் தொடர்வதாகவும் இன்னும் பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கிசரா மண்டல வட்டாட்சியராக பணியாற்றி வரும் நாகராஜ் என்பவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை உள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் அஞ்சிரெட்டி என்பவர் வட்டாட்சியர் நாகராஜிடம் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகராஜின் வீட்டில் நடத்திய திடீர் சோதனையில், அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய 28 ஏக்கர் நிலத்தை இடைத்தரகர் அஞ்சிரெட்டி பெயரில் பட்டா அளித்திடுவதற்காக ஒருகோடியே பத்து லட்சம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து வட்டாட்சியர் நாகராஜ் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.