சத்தீஸ்கரில் குட்டாகட் அணையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று இரவு முதல் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்று விமான படையின் விமானத்தால் மீட்கப்பட்டார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் வடமாநிலங்களில் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ளது, குட்டாகாட் அணை.
இங்கு கடும் வெள்ளப்பெருக்கால் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிகிறது.
இதில் இளைஞர் ஒருவர் குளிக்க சென்ற போது வெள்ளநீரில் சிக்கிக் கொண்டார். உடனே அவர் அடித்துச் செல்லப்பட்ட போது ஒரு மரத்தின் கிளையில் நேற்று தொங்கிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் வந்தனர். அப்போது அங்கிருந்த அவரை மீட்க முடியாததால் இந்திய விமான படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விமானத்தில் வந்த வீரர்கள் அந்த நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். இதுகுறித்து பிலாஸ்பூர் ஐஜி தீபன்சூ கப்ரா கூறுகையில் ரத்தன்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு ஏராளமானோர் கூடினர். போலீஸாரும் இருட்டான நிலையிலும் அவரை காப்பாற்ற முயற்சி செய்யப்பட்டது. எனினும் கும்மிருட்டால் அந்த இளைஞர் எங்கே இருக்கிறார் என்பதை பார்க்க முடியவில்லை. இதையடுத்து பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நேற்று இரவு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது நீரின் வேகம் அதிகமாகவே இருந்தது. இதனால் நேற்றைய தினம் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவர் இன்று காலை பத்திரமாக ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டார் என்றார் கப்ரா. ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீராக இருப்பினும் மனதைரியத்துடன் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கும் மீட்புக் குழுவினருக்கும் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.