திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.
எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்திருந்தார். .
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சபாநாயகம், எஸ்.பி.பி.யின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும் 48 மணி நேரமாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
இந்த நிலையில் இன்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவமனையின் அறிக்கையில் எஸ்பிபி., உடல் நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது, அவரது ரசிகர்களை சோகத்திலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.