திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில், இரயில் நிலையம் அருகே இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவரது உடலை தேடும் பணியும் நடைபெற்று வந்த நிலையில், 4 கிமீ தூரம் தொலைவில் தைலமரத்தோப்பு பகுதியில் உடல் வீசப்பட்டுள்ளது.
இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் கிராமத்தை சார்ந்த மாதவன் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகியிருந்ததும் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் ரவுடியாக வலம்வந்த மாதவன், ஆரம்பாக்கம் காராமணி பகுதியை சார்ந்த முனுசாமி (வயது 30) என்பவரின் கொலை வழக்கில் கைதாகி, கடந்த மாதம் 29 ஆம் தேதியில் ஜாமினில் வெளியாகி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேற்கூறிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பழிக்கு பழி தீர்க்கும் நோக்கத்துடன் கொலையை செய்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.