கோவை 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், வணிக நிறுவனங்கள் இயங்குவதில் அரசு தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. எனினும், முகக்கவசம், தனிநபர் இடைவெளி என்று விதிமுறைகளை பின்பற்ற கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் சீல் வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில், கோவை 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜூவல்லரி நகைக்கடையைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டதால், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.
இந்நிலையில், அங்கு பணியாற்றி வந்த 90 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓரே கடையில், 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்குள் நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள், தாமாக முன்வந்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டு, பல பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட காரணமாக இருந்த கல்யாண் ஜுவல்லரி நிர்வாகம் மீது சுகாதார துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின், அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் ஜூவல்லரி மேலாளர்கள் மேலாளர்கள் விஜயகுமார் , விபின் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.