பீரோவில் இருந்த 15 சவரன் நகையை விட்டுவிட்டு பேராசையில் அருகில் இருந்த 100 சவரன் கவரிங் நகைகளை அள்ளிச்சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜீவாநந்தம் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15ஆம் தேதி ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பியப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது பிரோவும் உடைக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசாரும் கைரேகை நிபுணரும் வர வேண்டும் என்பதால் ஜீவாநந்தம் பீரோவை திறந்து பார்க்கவில்லை.
போலீசார் வந்து பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை எடுத்து காண்பித்தனர். இதனை கண்ட ஜீவானந்தம் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் ஜீவானந்தம் சோதனை செய்து பார்த்ததில் 3 நகை பெட்டிகளில் வைத்திருந்த தனது 3 பெண் குழந்தைகளின் கவரிங் நகைகள் சுமார் 100 சவரன் அளவிற்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
தங்க நகைகள் வைத்துவிட்டு கவரிங் நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றதால் ஜீவாநந்தம் நிம்மதியடைந்தார். எனினும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.