உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. வைரஸ் பாதிப்பை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸில் இருந்து வெளியாகும் புதிய மரபுப் பிறழ்வு (D614G) ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பிறழ்வு தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இது மலேசியாவிலுல் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ‘D614ஜி’ பிறழ்வு வைரஸ் பாதிப்பு, கொரோனாவுக்கான தடுப்பூசிகளைப் பற்றிய தற்போதைய ஆய்வுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளதால மலேசிய சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசகரும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச தொற்று நோய்களின் சங்கத்தின் தலைவருமான பால் தம்பியா, இந்த டி 614 ஜி பிறழ்வு சிங்கப்பூரிலும் கண்டறியப்பட்டுள்ளது என்றார். ஐரோப்பாவில் கொரோனா பிறழ்வு அதிகரித்தாலும் இறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த கொரோனா வைரஸ் பிறழ்வு ஒரு தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்காது என்று தெரிவித்த அவர், பிறழ்வு வைரஸைக் கொண்டிருப்பது ஒரு நல்ல விஷயம், இது மிகவும் வேகமாக பரவுக்கூடியது, ஆனால் அதிக ஆபத்தானது இல்லை. பெரும்பாலான வைரஸ்கள் பிறழ்வதால் அவை குறைந்த வைரஸாக மாறும் என்று தம்பியா கூறினார்.