காவல்துறையில் எல்லோரும் கறைபடிந்த கரம் கொண்டவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அப்படி பல பேர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், அவர்களை களைய ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தெலுங்கானா காவல்துறை.
தெலுங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தத் தகவலை ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன், காவல் துறையினர் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அப்படிப்பட்ட நபர்கள் குறித்து 9490616555 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டறிய உதவுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நடைமுறை நாடு முழுவதும் வந்தால் நன்றாக இருக்கும்.