விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காசநோய்க்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் கடந்த 8 ஆம் தேதி செஞ்சி அருகே உள்ள சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்ற போது அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே 12 ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காச நோய்க்கான சிகிச்சை சிறப்பு பிரிவில் அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருடன் அவரது மனைவி மற்றும் மகள் உடன் இருந்த நிலையில் மருத்துவமனையில் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்து கழிவறை சென்று பார்த்தபோது கழிவறையின் ஜன்னலில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக உடலை மீட்ட மருத்துவ கல்லூரி ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது அவர் உயிர் இழந்தது தெரியவந்தது.
தற்போது அவர்களுடன் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.