தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை அதற்கான உத்தரவு அமலில் உள்ளது.
இதனை அடுத்து பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால், தற்போது மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் அபிஷேக் வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரிக்கையில், மாணவனுக்கு ஆன்லைனில் எடுக்கும் பாடங்கள் புரியாததாலும், அவரது பெற்றோர் மகனை படிக்கவில்லை என்று திட்டியதாலும் மன விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.