ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது நியாயமானது என்றும், கொரோனா நெருக்கடியின் காலங்களில் இது அவசியமான நடவடிக்கை என்றும் இந்திய ரயில்வே கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏ.என்.ஐ.யுடன் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், கோவிட் -19 காலங்களில் ரயில்வே பிளாட்பார்மில் சமூக விலகலை பராமரிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் அதனால் தான் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் முழு நாடும் கோவிட்-19 தொற்றுநோயுடன் போராடுகிறது. மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் வளரத் தொடங்கிய நேரத்தில் சமூக விலகலை கடைபிடிக்க ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலையை நாங்கள் உயர்த்தியிருந்தோம்.
இப்போது கூட, நாங்கள் இயக்கும் ரயில்களில் சமூக விலகலை முறையாக பின்பற்றுகிறோம்
டிக்கெட்டுகளை உறுதிசெய்த நபர்கள் மட்டுமே ரயில்வே வளாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.
ரயில்வே நிலையத்தில் மக்கள் தொகை, நெரிசல், உள்ளூர் சூழ்நிலை, , சமூக தூரத்தை பராமரிப்பதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களை கொண்டு ரயில்வே மேடைகளுக்கான டிக்கெட் விலையினை அவர்களே நிர்ணயித்துக்கொள்ள எங்கள் பிரதேச ரயில்வே மேலாளர்களுக்கு (டி.ஆர்.எம்) அங்கீகாரம் அளித்துள்ளோம்.
இந்த உத்தரவின் கீழ், நாட்டின் பல பெரிய ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.
கொரோனா நெருக்கடியின் முடிவில் நிலைமையை மதிப்பிட்டு டிக்கெட்டின் விலையை மாற்றலாம். பண்டிகை காலத்தின் போதெல்லாம், ரயில்வே நிலையங்களில் அதிக நெரிசல் வரும்போது, பயணிகள் அல்லாத மக்கள் தேவையில்லாமல் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கூட்டத்தை அதிகரிப்பதையும் நாங்கள் விரும்பவில்லை” என்று பேசியுள்ளார்.
முன்னதாக புனே ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை அதிகரித்தது மக்கள் தேவையில்லாமல் ரயில் நடைமேடைகளில் வருவதைத் தடுக்கவும், தற்போது நடைபெற்று வரும் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் சமூக விலகலை பின்பற்றுவதை உறுதிசெய்யவும் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகளின் விலை 3 ரூபாயிலிருந்து தற்போதைய பாஜக அரசாங்கத்தால் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயா சிங் கூறியதையடுத்து இந்த விளக்கத்தை ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.