உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமி, பிரதமர் மோடிக்கு 18 பக்க கடிதம் ஒன்றை எழுதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் சாம்பால் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தற்கொலைக்கு முன் அந்த சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். 18 பக்கத்திற்கு நோட்டு புத்தகம் ஒன்றில் எழுதிவைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் தனது கோரிக்கைகள் மற்றும் விருப்பங்கள் பலவற்றை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.
அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு, மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல், மரங்களை வெட்டுவது உள்ளிட்டவைகள் குறித்து அந்த சிறுமி கவலை தெரிவித்துள்ளார். அதில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும்,
ஹோலி பண்டிகையின் போது ராசயணம் நிறைந்த கலர் பொடிகளை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும், ‘இங்கு முதியவர்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள். இதனால் அவர்கள் கடைசி காலங்களில் வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.
பெற்றோர்களை பிள்ளைகளே முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்த இடத்தில் நான் இனியும் வாழ விரும்பவில்லை, இக்கடிதத்தை பிரதமரின் கையில் சேர்த்து விடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
பாப்ராலாவில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ள அச்சிறுமிக்கு ஏற்கனவே உளவியல் ரீதியான பிரச்னைகள் இருந்ததென்றும் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்ததென்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது மகளின் ஆசைப்படி அந்த கடிதத்தை பிரதமர் மோடியிடம் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.