தனிநபர்கள் தங்கள் வீட்டு வாயிலிலும் கோவில் நுழைவாயிலிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம்; ஒரு நபர் அதனை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விநாயகர் சதுர்த்தி விழா குறித்த வழக்கினை முடித்து வைத்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடங்களில் தனிப்பட்ட வகையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தகுந்த இடைவெளியுடன் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்தது. அதேநேரம், வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில், கரைக்கலாம். சென்னையில் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிமனித இடைவெளியுடன் கரைக்கலாம் என்று தெரிவித்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
முன்னதாக, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கு விசாரணையின்போதும், அரசு விதித்துள்ள தடையைத் தளர்த்த இயலாது என தமிழக அரசு உறுதிபட தெரிவித்தது.
அதே நேரம், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படாது என்றும், அரசின் உத்தரவுக்கும் நடைமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யும் இந்து அமைப்புகள், குறிப்பாக இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் உறுதி கூறின.
இதை அடுத்து வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளைத் தனி நபர்களே நீர்நிலைகளில் கரைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், வீடுகளின் வாசலிலும், கோயில் வாசலிலும் தனி நபர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்தி, ஒருவரே அதை எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்றும், சென்னையில் மெரினா கடற்கரையைத் தவிர பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.