கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார் தன்னார்வலராக மாறியுள்ள தேநீர் கடைக்காரர் ஒருவர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருவதால், பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கொரோனாவால் பாதித்தவர்களின் உடலிற்கு இறுதிச்சடங்கு நிகழ்த்துகின்றனர்.
அந்த வகையில், பெங்களூருவில், தேநீர்க் கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னார்வலராக மாறி அப்பகுதி மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.
பெங்களூருவில் தேநீர் கடை வைத்திருப்பவர் அப்துல் ரசக். 40 வயதாகும் அவர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலிற்கு இறுதிச்சடங்கு நடத்திவருகிறார்.
இந்த நிலையில், செய்ண்ட் ஜான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
அதனை அடுத்து, அந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு நடத்த முன்வந்த ரசக், தனி ஆளாக அந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு நடத்தியுள்ளார். அவருக்கு அந்த குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்து, அவரது இந்த சேவைக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரசக் பேசியபோது, “ஊரடங்கு காலம் என்பதால் என் தேநீர் கடை சரியாக ஓடவில்லை. இதனால் கிடைக்கும் நேரத்தில் தொண்டு செய்துவருகிறேன்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க குடும்பத்தினர் சிலர் மறுக்கும் நிலையில், இதுபோன்று செய்வது சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று கூறியுள்ளார். இவர் குறித்து வீடியோவை பெங்களூரு மிரர் செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Video of volunteer in #Bengaluru carrying a dead child in his arms has left netizens teary-eyed.
— Bangalore Mirror (@BangaloreMirror) August 20, 2020
More here: https://t.co/58rOoVYHgn pic.twitter.com/MoolRzyeFJ