கர்நாடகா வழியாக, தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு, ‘இ – பாஸ்’ இல்லாவிட்டால் கூட, விண்ணப்பிக்க வைத்து, அனுமதி கிடைத்தவுடன், அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக் கிழமையான நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழக எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஜூஜூவாடியில் உள்ள கொரோனா சோதனைச்சாவடியில், நேற்று தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.
கர்நாடக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, இ – பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டும், அங்கு பதிவு செய்யப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.
இ – பாஸ் இல்லாமல் வாகனங்களில் வரும் மக்களை, ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தும் அதிகாரிகள், இ – பாசுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர்.
விண்ணப்பித்து, உடனே அனுமதி கிடைத்த பின், அவர்களை தமிழகத்துக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். இருசக்கர வாகனங்கள்எந்த தடையுமின்றி, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.
தமிழக எல்லையில் உள்ள ஓசூருக்கு செல்வதாக கூறி, கர்நாடகாவில் இருந்து, இ – பாஸ் இல்லாமல் நுழைய முயன்ற, நான்கு சக்கர வாகனங்களை, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஓசூர் பகுதிக்கான, முகவரி சான்று அடங்கிய ஆவணங்கள் இருந்தால் மட்டும், அதிகாரிகள் அனுமதித்தனர்.