தனியாக வசித்துவந்த மூதாட்டி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு வீட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தேவாங்கபுரம் என்ற கிராமத்தில் வசித்துவந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். இவரது ஒரே மகள் கோமதி என்பவருக்கும் திருமணம் முடிந்து அவர் அவரது கணவருடன் வசித்துவருகிறார்.
இதனால் ராஜேஸ்வரி மட்டும் தனியாக வீட்டில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தங்கியிருந்த வீடு கடந்த நான்கு நாட்களாக பூட்டப்பட்டு கிடந்துள்ளது.
அவரும் வீட்டைவிட்டு வெளிய வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ராஜேஸ்வரி மகள் கோமதிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து தனது தாயின் வீட்டுக்கு வந்த கோமதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. சமயலறைக்கு சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
உடனே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கினர். இதில் ராஜேஸ்வரியிடம் கடன் வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணையை தொடங்கியநிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான கணேசன் என்பவர் மட்டும் தலைமறைவாகி இருந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சென்னையில் தலைமறைவாகி இருந்த கணேசனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது பல்வேரு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கணேசன் ராஜேஸ்வரியிடம் 10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். தற்போது உள்ள சூழலில் அவரால் வட்டிகூட கட்டமுடியாத நிலையில் ராஜேஸ்வரி கணேசனின் வீட்டிற்கு சென்று அவரை திட்டி, குடும்ப உறுப்பினர்கள் முன் அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் இதுகுறித்து பேசுவதற்காக ராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்றபோது அங்கு மேலும் வாக்குவாதம் முற்றியுள்ளது. உடனே அருகில் இருந்த கம்பியை எடுத்து கணேசன் ராஜேஸ்வரியின் தலையில் அடித்துள்ளார். இதில் ராஜேஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பின்னர் வெளியே சென்று பெட்ரோல் வாங்கிவந்து ராஜேஸ்வரியின் உடலை எரித்துவிட்டு அவரது நகைகளை எடுத்துக்கொண்டு, அந்த நகைகளை கடையில் அடகு வைத்து, அந்த பணத்தை கொண்டு சென்னை சென்றதாக கணேசன் கூறியுள்ளார்.
தற்போது கணேசனை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.