கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயிலில் எழுந்துள்ள நிதி நெருக்கடியின் காரணமாக, அதன் பெட்டகங்களில் உள்ள பாரம்பரியமான தங்க நகைகளை அடகு வைக்க திட்டமிட்டுள்ளது திருவாங்கூர் தேவஸம் போர்டு. தங்க நகைகளை அடகு வைப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியை அணுக திட்டமிட்டுள்ளது தேவஸம் போர்டு.
கேரளாவில் தேவஸம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்பட 1252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதனால் அனைத்து கோயில்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டில் 50 பியூன்கள், 140 கிளார்க் பதவிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் தேவஸம் போட்டின் கீழ் மொத்தம் 1,252 கோயில்கள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானத்தை வைத்து தான் மற்ற கோயில்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தேவசம் போர்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக மாதம் 35 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தேவசம் போர்டு திணறுகிறதாம். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, கோயில்களில் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கியில் அடகு வைத்து பணம் பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘இந்தியாவில் உள்ள சில செல்வச் செழிப்பான கோயில்கள் – ஆந்திராவின் திருமலை திருப்பதி ஸ்ரீவேங்கடாசபதி கோயில் முதல் கேரளாவின் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வரை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க போராடி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தங்க நாணயமாக்குதல் திட்டமானது, வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் செயலற்ற தங்க இருப்புக்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 2.25 சதவீதம் முதல் 2.50 சதவீதம் வரையிலான வட்டிக்கு ஈடாக வைக்க அனுமதிக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசு அதிகாரிகளுடன் முக்கிய கோயில் வாரிய அதிகாரிகள், ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஒரு சந்திப்பை நடத்தினர். வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தங்கக் கடன்களுக்கு எதிராக 2.5% வட்டி பெறக்கூடிய, தற்போதுள்ள ‘தங்க நாணயமாக்கல் திட்டத்தை’ பயன்படுத்த ஊக்குவிக்கப் பட்டுள்ளதாக TDB தலைவர் என் வாசு தெரிவித்துள்ளார்