வியட்நாமில் 92 வயது முதியவர் ஒருவர் கடந்த 80 ஆண்டுகளாக தனது தலைமுடியை வெட்டாமல் 5 மீட்டர் தூரத்திற்கு வளர்த்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் சில மாதங்கள் சலூன்கள் மூடப்பட்டதற்கே ஆண்கள் மிகவும் அவதிப்பட்டனர். தலைமுடி, தாடியை வெட்ட முடியாமல் அவர்கள் சிரமப்படுவதாக பல மீம்களும் வர ஆரம்பித்தன. இந்நிலையில் வியட்நாமை சேர்ந்த 92 வயது முதியவரான நுயேன் வான் சியன் கடந்த 80 ஆண்டுகளாக தலைமுடியை வெட்டவில்லை. அவர் பள்ளிக்கு செல்லும் வரை மட்டும்தான் முடியை வெட்டி வந்துள்ளார். அதன்பிறகு அதனை வெட்டவோ, சீப்பு வைத்து சீவவோ இல்லை. இதன் காரணமாக அவரது தலைமுடி 5 மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது.
தலைமுடியை வெட்டினால், தான் இறந்துவிட வாய்ப்புள்ளதாக அவர் நம்புகிறார்.
கடவுள் கொடுத்த எதையும் மாற்ற விரும்பவில்லை என்றும், அதனால் சீப்பு வைத்து கூட தன்னுடைய முடியை ஒழுங்குபடுத்துவதில்லை என்றும் கூறியுள்ளார். இதனை ஒரு துணி வைத்து மொத்தமாக தலையில் கட்டி வைத்துக் கொள்கிறார். இதன் மூலம் தனது முடியை சுத்தமாகவும், அழகாகவும் பாதுகாக்க முடிவதாக கூறியுள்ளார்.
ஏழு கடவுள்களை மிகுந்த பக்தியுடன் வழிபடும் அந்த முதியவர், கடவுளின் உத்தரவுப்படி, இந்த முடியை வளர்ப்பதாக கூறுகிறார். தனது முடி இறுக்கமாகி தலையில் நன்றாக ஒட்டிக் கொண்டு தனக்கே உரியதாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அவரது மகன் தனது தந்தையின் தலைமுடியை பராமரிப்பதற்கு உதவுகிறார். அவருக்கும் தலைமுடியை வெட்டினால் தந்தை இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.