கடமை தவறாது தாய்நாடு மீது பற்று மிகுந்த காவல் ஆய்வாளரை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி, சுதந்திர தினத்திற்கு முந்திய நாள் இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் உயிரிழந்தார்.
தனது தந்தை உயிரிழந்த போதிலும் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையை தலைமை ஏற்று பணியில் ஈடுபட்டார் மகேஸ்வரி. காவல்துறை அணிவகுப்பு மரியாதை முடித்த பின்னர், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார்.
தனது தந்தை உயிரிழந்தது தெரிந்தும் கடமை தவறாது தாய் நாடு மீது கொண்ட பற்றால், பணி செய்த காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரியை ஊக்குவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.