ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி, சென்னை மற்றும் கோவையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், கோவை மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.
அதன்படி, செப்டம்பர் 12 தேதி (சனிக்கிழமை) வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட அன்று கோவையில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்க குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
கொரானா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஓணம் பண்டிகையை சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, சென்னையில், கேரள மக்கள் அதிகம் வசிப்பதால் ஓணம் பண்டிகை நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 31 ஆம் தேதி ஓணம் பண்டிகையை கொண்டாட இருப்பதால், அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்களுக்கும், உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி, நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.