திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை நடைபெறாத விதம் அடுத்த மாதம் நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது.
திருமலையில் வெள்ளிக்கிழமை காலை அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல் விவகாரமாக வருடாந்திர பிரம்மோற்சவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஏழுமலையான் பிரம்மோற்சவம் என்பது எப்போது லட்சகணக்கான பக்தர்கள் புடைசூழ தினசரி காலை, இரவு என இரு வாகன சேவையுடன், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம், நடனம், நாட்டியம் என கலைஞர்களின் பின்னணியில் பிரம்மாண்டமாக நடைபெறும். அதை காண லட்சக்கணகான பக்தர்கள் கூடுவதால், திருமலை கோலாகலமாக விளங்கும்.
ஆனால் தற்போது கொரோனா தொற்று விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிக அளவில் மக்கள் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு அதிக மாதம் காரணமாக திருமலையில் 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது.
அதில் முதலில் செப். 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட உள்ளது. எனவே, வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஆர்பாட்டம் இல்லாமல் தனிமையில் கோயிலுக்குள் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தேவஸ்தான வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வாக இந்தாண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் மாதம் நடக்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவம் அப்போது மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.