கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் இன்று காலமானார். மூச்சுத்திணறல் அதிகரித்த நிலையில் உடல்நலம் மோசமடைந்து இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று மாலை அவரது உயிர்பிரிந்தது. சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வசந்தகுமார். காங்கிரஸ் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவருக்கு தற்போது வயது 70.
கொரோனா பாதிப்பு காரணமாக ஆக.10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார் உடல்நிலை மோசமடைந்தது. இன்று காலையில் அவரது உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வௌியானது.
கடந்த வாரம் வசந்தகுமார் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தகவல் தெரிவித்தது. வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் அதுவரை மருத்துவமனையில் உடன் இருந்தார்.
இன்று காலமான வசந்தகுமார், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர் என்பதும், தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசையின் சிறிய தந்தை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், வசந்த்குமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரும் தமிழகம் வரக்கூடும் என்று கூறப் படுகிறது.