தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுவதால் மாவட்ட எல்லைகளிலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால் போக்குவரத்தும் அதிகரிக்கும். இதற்கிடையே சில ரகசிய தகவல்களின் பேரில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி இன்று (ஆக.31) இரவு முதல் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதனால் இன்று இரவில் இருந்து மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மறு உத்தரவு வரும்வரை சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்.
மேலும், சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் தமிழக போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.சந்தேக நபர்கள் குறித்து காவல்கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கும்படி பொதுமக்களை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல் வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.