ஈரோட்டில், குளியலறையில் மயங்கி சிறுவன் இறந்தது, உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு, கொல்லம்பாளையம், தீபன் நகர், கே.டி.கே.தங்கமணி வீதியை சேர்ந்தவர் கண்ணன், 46; டெக்ஸ்டைல் உரிமையாளர். இவரது மனைவி சித்ரா தேவி, 42; தனியார் பள்ளி ஆசிரியை. தம்பதியரின் மகன் செந்தமிழ்குமரன், 13; சித்ராதேவி பணியாற்றும் பள்ளியிலேயே ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, செந்தமிழ் குமரன் குளியலறைக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சிறுவனுக்கு அதிக அளவில், உடலில் வியர்க்கும் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவமும் பார்க்கவில்லை.
இன்று நடக்க இருக்கும் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே, இறப்புக்கான காரணம் தெரியும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக, ஈரோடு தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்