உடல் நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடல் நலம் தேறிய நிலையில் திங்கள் கிழமை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆக.2ஆம் தேதி தமக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பதாக சோதனை முடிவுகளில் தெரியவந்ததால், தம்மை தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்ட அமித் ஷா, பின்னர் ஹரியானா மாநிலம் குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அங்கே கோவிட் 19 தொற்றில் இருந்து விடுபட்டு, குணமடைந்து வீடு திரும்பினார் அமித் ஷா. ஆயினும் கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பிறகான பக்க விளைவுகளால் ஆக. 18ஆம் தேதி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து கொண்டே அலுவலகப் பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப் பட்டது. கொரோனா அல்லாதவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமித் ஷா, விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவர் குணமடைந்து விட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர். இதனை சனிக்கிழமை அன்று எய்ம்ஸ் மருத்துவமனையும் உறுதி செய்து அறிவித்தது.
இந்த நிலையில் திங்கள் கிழமை இன்று காலை அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.