spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மகன் இறந்தது தெரியாமல் மூன்று நாட்களாக சடலத்துடன் இருந்த தாய்!

மகன் இறந்தது தெரியாமல் மூன்று நாட்களாக சடலத்துடன் இருந்த தாய்!

- Advertisement -
samuvel

சென்னை திருநின்றவூர், சி.டி.ஹெச் சாலை, பெட்ரோல் பங்க் அருகில் குடியிருந்து வருபவர் சரஸ்வதி (35). இவரின் மகன் சாமுவேல் (7). இவர், அந்தப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தார். சரஸ்வதி, இன்று காலை 9 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.

அப்போது அவர், “என் மகனுக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் வீட்டிலேயே படுத்திருந்தான். கடந்த மூன்று நாள்களாக அவன் கண்விழிக்கவில்லை. இன்று அவனிடமிருந்து தூர்நாற்றம் வீசுகிறது” என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட போலீஸார், அவர் முகவரியைக் கேட்டிருக்கிறார்கள். பின்னர், திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு சரஸ்வதி கூறிய முகவரியைத் தெரிவித்து போலீஸார் விவரத்தைக் கூறினர்.

இதையடுத்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குள் சாமுவேல் இறந்துகிடந்தார். அவர் இறந்து மூன்று நாள்களுக்கு மேலானதால் சடலம் அழுகி தூர்நாற்றம் வீசியது. மகனின் அருகில் சரஸ்வதி அழுதுகொண்டிருந்தார்.

saraswati

போலீஸார் அவரிடம், என்ன நடந்தது?'' என்று கேட்டபோது,உடல்நலம் சரியில்லை என்று சாமுவேல் கூறினான். அதன் பிறகு படுத்தே கிடந்தான். அவன்மீது எறும்பெல்லாம் ஏறின. அதைக்கூட அவன் கண்டுகொள்ளவில்லை. நான்தான் அதையெல்லாம் தட்டிவிட்டேன்” என்று சரஸ்வதி கூறினார். சரஸ்வதியின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்த போலீஸார் அவரின் பக்கத்து வீடுகளில் விசாரித்தனர். அப்போதுதான் சரஸ்வதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரியவந்தது.

சாமுவேலின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரஸ்வதியின் குடும்பப் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சோகமான தகவல்கள் வெளியாகின.

இது குறித்து திருநின்றவூர் போலீஸார் கூறுகையில், “கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதிக்கும் ஜீவா என்கிற ஜீவானந்ததுக்கும் திருமணம் நடந்தது. சரஸ்வதிக்கும் ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்துவிட்டனர். அதனால் மகனுடன் சரஸ்வதி, திருநின்றவூரில் வசித்துவருகிறார்.

சரஸ்வதி சொந்த வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் ஹோமியோபதி டாக்டராகப் பணியாற்றி வந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அது குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. கொரோனா காரணமாக அவருக்கு ஆறு மாதங்களாக வருமானம் இல்லை. அதனால் வறுமையில் தவித்து வந்திருக்கிறார். யாரிடமும் அதிகமாகப் பேசாத சரஸ்வதியும் சாமுவேலும் கடந்த மூன்று தினங்களாக வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்று சரஸ்வதி, காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த பிறகுதான் சாமுவேல் உயிரிழந்த சம்பவம் வெளியில் தெரிய வந்திருக்கிறது.

சரஸ்வதியிடம் விசாரித்தால் அவர் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறார். அதனால், அவரின் கணவர் ஜீவா மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தால் தான் சரஸ்வதி குடும்பம் குறித்த விவரங்கள் தெரியவரும். மேலும் சாமுவேல் மரணத்துக்கு என்ன காரணம் என்ற விவரமும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் தெரியவரும். சரஸ்வதியிடம் விசாரித்தபோது, ஜீவா ஹோமியோபதி டாக்டர் என்று கூறியுள்ளார்

சாமுவேலுக்கு, கிட்னி பிரச்னை இருந்து வந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக சரஸ்வதியும் சாமுவேலும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். அதனால், சரஸ்வதிக்கும் முதலுதவி செய்து, சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறோம்” என்றனர்.

` சரஸ்வதி குறித்து அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் சரஸ்வதியின் கணவர் ஜீவாவிடம் விசாரித்த பிறகுதான் இந்தச் சம்பவம் குறித்த முழு விவரம் தெரியும் என போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

சரஸ்வதி சொல்லும் முரண்பட்ட தகவல்களால் திருநின்றவூர் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.

மகன் இறந்ததுகூடத் தெரியாமல் மூன்று நாள்கள் அவனுடன் தாய் வசித்து வந்த சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe