திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுவதாக கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோயில்கள் அனைத்தும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதித்து மூடப் பட்டன. அதன் பின்னர், தற்போது 5 மாதத்திற்கு பிறகுதான் தமிழகம் முழுவதும் கோயில்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப் படுகின்றன.
இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் கூடிய தரிசனம் குறித்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செயல் அலுவலர் அம்ரித் விடுத்துள்ள அறிக்கை:
இக்கோயிலில் முதற்கட்டமாக 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் 65 வயதிற்கு மேற்பட்டோர், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றம் கர்ப்பணி பெண்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.
முதற்கட்டமாக இலவச தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண வழி தரிசனத்திற்கு 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். டோக்கன் முறையில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
கோயிலில் அனுமதிக்கப்படும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய கோயிலில் 13 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்ப சோதனை செய்யும் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
கோயில் பிரதான சன்னதிகளான சுப்பிரமணியசுவாமி மற்றும் சண்முகர் சன்னதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
தங்கரதம் உலா, சண்முகார்ச்சனை, அபிஷேகம், பூஜை பொருட்கள், கொண்டுவர அனுமதியில்லை.
முடிகாணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கடற்கரையில் நீராடுதல், நாழிகிணறு நீராடுதல், தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
கோயில் மூலம் வழங்கப்படும் அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும்.
கோயிலுக்கும் வரும் பக்தர்கள் தெற்கு டோல்கேட் அருகில் முடிகாணிக்கை எதிரில் உள்ள இடத்திலும், வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலையரங்கிலும் அமர செய்து அடையாள அட்டை விவரம் பெற்று டோக்கன் மற்றும் கட்டண சீட்டு வழங்கப்படும்.
25 நபர்களாக பிரிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள்.
கொரோனா பரவலை தடுக்க கண்காணிக்க சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடமுறைகளை குறித்து கோயில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்படும் … என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.