மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோயில் திறக்கப்பட்டும், மலைமீதுள்ள நூபுர கங்கை பூட்டப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் மலைமேல் நீராடி, புனித நீரை கொண்டு செல்ல வழியில்லாமல் ஏமாற்றத்துடன் செல்வதைக் காண முடிந்தது.
அழகர் கோயிலானது வைணவத் தலங்களில் மிகவும் பாடல் பெற்ற கோயிலாகும். மதுரை மாவட்டத்திலும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் தொடங்குவதற்கு முன்பு, இப் பகுதியில் உள்ள பூசாரிகள், சாமியாடிகள் அனைவரும், அழகர் கோயிலுக்கு சென்று மலைமேல் உள்ள நூபுர கங்கையில் நீராடி, தாங்கள் கைகளில் கொண்டு செல்லும் பெரிய கேன்களில் புனித நீரை எடுத்துக் கொண்டு, ராக்காயம்மன், சுந்தர்ராஜ பெருமாள், தாயார், மற்றும் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண சாமியை வழிபட்டு வந்து கோயில்களில் அந்த புனித நீரை தெளித்து பின்னர் விழாக்களை நடத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த 5 மாதங்களாக கோயில்கள் அடைக்கப் பட்டிருந்தால், பக்தர்கள் மன வேதனையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் கோயில்கள் திறக்க அரசு உத்தரவிட்டும், அழகர் கோயில், சோலைமலை முருகன் ஆலயங்கள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், அழகர் கோயில் மலை மீதுள்ள நூபுர கங்கையானது திறக்கப்படாமல், கோயில் சார்பாக பூட்டப்பட்டுள்ளது. இன்று காலை கோயில் திறக்கப் பட்டதும், வெளியூர்களிலிருந்து கேன்களுடன் வந்த பக்தர்கள், நூபுர கங்கை பூட்டப்பட்டிருபதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார், ஊமச்சிகுளம் டிஎஸ்பி ஜெயக்குமார் ஆகியோர், ஆழகர் கோயிலை பார்வையிட்டனர். பிறகு கோயில் பேஷ்கார் கருப்பையாவிடம், சரியான வெண்டிலேட்டர் வசதி செய்யப்படவேண்டும், முகக் கவசம் அணியாமல் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது, கோயில் வாசலில் சானிட்டரி வசதி, கை, காலை கழுவ வசதி செய்யக் கேட்டுக் கொண்டனர்.
அலங்காநல்லூரைச் சேர்ந்த சுப்ரமணியன் கூறியது: அழகர்கோயிலை திறந்தது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது, அதே சமயத்தில் மலைமேல் உள்ள நூபுர கங்கை பூட்டப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை