தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த விவகாரத்தில், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானம் வாசலில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு காவி வண்ணத்தில் மாலை அணிவித்து அந்தப் புகைப்படங்களை சமூகத் தளங்களில் பதிவிட்டது தொடர்பாக, பாஜக., நிர்வாகி சதீஷ் மற்றும் நான்கு பேர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை தமுக்கம் மைதானம் முன்பு தமிழன்னைக்கு சிலை உள்ளது. இந்த சிலைக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் முக்கிய தினங்களில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
கடந்த வாரம் மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் சதீஷ் ஆசாத் தலைமையில் கட்சியினர் தமுக்கம் மைதானம் வந்தனர். அவர்கள் தமிழன்னை சிலையை வணங்கி மாலை அணிவித்தனர். பூ மாலையில் காவி துணியை சுற்றி அதனை தமிழன்னை சிலைக்கு மாலையாக அணிவித்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
பூமாலையை காவி மாலையாக தமிழன்னை சிலைக்கு அணிவித்த விவகாரத்தை சிலர் சமூகத் தளங்களில் பிரச்னையாகக் கிளப்பினர். இதை அடுத்து, போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை