இந்தியாவின் பாதுகாப்பு, இளைஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், 118 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் உள்பட, பல்வேறு மாணவர் நலன் விரும்பிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இதற்கு வரவேற்பு தெரிவித்து சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஏபிவிபி அமைப்பின் தென்தமிழக மாநில இணைச் செயலாளர் விக்னேஷ் இது குறித்து வெளியிட்ட கருத்து: பப்ஜி உட்பட 118 சீன செயலிகளை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ABVP மாணவர் அமைப்பு மனதார வரவேற்கிறது. மாணவர்கள் கையில் எதிர்கால இந்தியா என்பார்கள் ஆனால் இன்றைய மாணவர்களின் ஆறாவது விரலாக அலைபேசி உள்ளது. மேலும் பப்ஜி விளையாட்டு போன்ற சீன செயலிகள் மாணவர்களது நிகழ்காலத்தையே கேள்விக்குறி ஆக்குவதாக உள்ளது.
குறிப்பாக கொரோனா விடுமுறை காலத்தில் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கச் செய்து மாணவர்களை மனநோயாளிகளாக மாற்றத் துடிக்கும் செயலிகள் தடை செய்யப்பட்டு இருப்பது பாராட்டிற்குரியது. மத்திய அரசின் இச்செயல் மூலம் வருங்காலங்களில் அலைபேசியை ஆக்கபூர்வமான வகைகளில் பயன்படுத்தி மாணவ சமுதாயம் வளர்ச்சி அடைய இது ஒரு நல்ல ஒரு துவக்கமாக இருக்கும் என ABVP கருதுகிறது… – என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாகவும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு பெருகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி (PUBG) இணைய விளையாட்டுக்குத் தடைவிதிக்கப் பட்டதை வரவேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமது டிவிட்டர் பதிவுகளில் வெளியிட்ட கருத்துகள்…
1) இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப் படுவார்கள்!
2) பப்ஜி இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி!
3) பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும்!