என்னாது சமூக இடைவெளியா? கொஞ்சம் சுமூகமா இருக்க பாருங்க! என்று கேட்கும் அளவுக்கு சென்னை மாநகர பேருந்துகளில் பயணியர் கூட்டம் வழக்கமான நெரிசல்கள் உடன் சென்று கொண்டிருக்கிறது
கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம் என்றெல்லாம் இத்தனைக் காலம் வீடுகளில் இருந்துவிட்ட மக்கள் இப்போது ஊரடங்கு ஓரளவு கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முட்டிமோதி சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கின்றனர்
சென்னை தவிர பிற பெரிய ஊர்களில் மாநகராட்சிகளில் இந்த அளவு பயணிகள் நெரிசல் இல்லை என்றாலும் சென்னை வழக்கம்போல் அபாயகரமான சூழலையே சந்தித்து வருகிறது
அரசு பஸ்களில் 60 சதவீதம் பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன
சென்னை மாநகர எல்லைக்குள் ஓடும் பஸ்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் படி பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து பயணித்தாலும் நெரிசல் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை! சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்குள் வரும் பெரும்பாலான மாநகர பஸ்களில் வழக்கமான கூட்டம் அலைமோதுகிறது புறநகர் மின்சார ரயில்கள் இயங்காத சூழ்நிலையில் இயங்கும் ஒரு சில பஸ்களையும் பயணிகள் கூட்டம் மொய்த்துவிடுகிறது
அந்த பஸ்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறிதான்!. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி 20 முதல் 25 பேர் வரை பயணிக்கும் அந்த பஸ்களில் கிட்டத்தட்ட 60 பயணிகளுக்கு மேல் பயணம் செய்வதை பார்க்க முடிந்தது.
கூடுவாஞ்சேரி-பிராட்வே (வழித்தடம் எண்.இ18), கூடுவாஞ்சேரி- தியாகராயநகர் (வழித்தடம் எண்.ஜி18), பட்டாபிராம்- பிராட்வே (வழித்தடம் எண்.71 இ) உள்பட முக்கியமான சில வழித்தடங்களில் ஓடும் பஸ்களில் வழக்கமான நாட்களில் இருக்கும் கூட்டத்தை போலவே இப்போதும் பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர்
பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக சென்றால் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி விடுவோம் என்பது பயணிகளை அச்சம் கொள்ளச் செய்கிறது என்றாலும், வேறு வழியின்றி சகித்துக் கொண்டு எப்படியாவது செல்ல வேண்டுமே என்ற சூழலில் பயணிக்கின்றனர்.
ஆனால் இதனை அதிகாரிகள் தான் கட்டுப் படுத்த வேண்டும்! கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் கூடுதலாக பஸ்களை அரசு இயக்க வேண்டும்! அனைவரும் அமர்ந்து செல்லவும், தகுந்த இடைவெளி விட்டு பயணிக்கவும் வசதி செய்ய வேண்டும்.