திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56) ரயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வேலை முடித்து வெளியே வரும்போது 3 பேர் அவரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று தென்னூர் பகுதியில் ஒரிடத்தில் வைத்து கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து அவர் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் அலெக்ஸ்ன் மருமகனும் நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கான வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா பிரச்சனைையால் சில மாதமாக பணம் கட்டவில்லை என்றும் இதனால் வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு நான் வெளியே வரும்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து என்னை கடத்தி கொண்டு போய் கட்டி வைத்து அடித்து உதைத்தனர் என்று புகாரில் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொன்மலை போலீசார் பாலக்கரை மல்லிகைப்புரத்தை சேர்ந்த நடிகர் ஜெரால்டு அதே பகுதி மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெபராாஜ் (38) மற்றும் விசு ஆகிய மூன்று பேரை தேடி வந்த நிலையில் ஜெஸ்டின் ஜெபராஜை கைது செய்தனர். தலைமறைவான நடிகர் ஜெரால்டையும் , விசுவையும் போலீீசார் தேடி வருகின்றனர்.
மேலும்,நடிகர் ஜெரால்டு பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர் – நடிகர் விஷாலின் பாண்டவர் அணியில் இருந்து நடிகர் சங்க தேர்தலை சந்தித்தவர் தமிழ் திரையுலகினர் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.