மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பதினோராவது தடவையாக ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் இடம் வழங்கினார் முதியவர் பூல்பாண்டியன்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர், மதுரை மாட்டுத் தாவணி, பூ மார்க்கெட்டு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் யாசகம் பெறுவது வழக்கம். இவ்வாறு, பெறும் யாசகப் பணத்தில் சாப்பாட்டுச் செலவு போக மீதி பணத்தை சேமித்து பல்வேறு நல்ல பணிகளுக்கு உதவி வருகிறார் பூல்பாண்டியன்.
இவர், ஏற்கெனவே தாம் யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பத்து தடவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பதினொருவது தடவையாக ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிதிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் வழங்கினார்.
இது குறித்து பூல்பாண்டியன் கூறிய போது… முதல் முதலாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் இருந்து ரூபாய் 100 பெற்றுக்கொண்டேன். அவர் ராசிதான்… இதுவரை ஒரு லட்சத்து பத்தாயிரம் சேர்ந்தது. அதனைக் கொடுத்துள்ளேன்… என்றார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை