இனி டாக்டரின் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே படிபடியாக அறிவிக்கப்படும் ஊரடங்கு தளர்வினால் மக்கள், வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பொது போக்குவரத்து தொடங்கியிருப்பதால் பாதிப்புகள் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்பவர்கள் டாக்டர்களின் பரிந்துரையின் படி மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் டாக்டர் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா சோதனை செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் அல்லது எங்கேனும் பயணம் மேற்கொள்பவர்கள், தேவைப்பட்டால் கொரோனா சோதனை செய்து சான்றிதழ் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.