கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் தொந்தரவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அரசு பணியில் இருந்த டாக்டர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். தனது ஆட்டோவின் பின்புறத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளால் பாதிப்புக்கு ஆளான அரசு டாக்டர் என்று எழுதியுள்ளார்.
இவரது நிலையை அறிந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, அவரை மீண்டும் பணிக்கு திரும்ப கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ரவீந்திரநாத். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை, மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது.
அதற்கு மறுத்த ரவீந்தரநாத், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாளே 2வது முறையாக அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் ரவீந்திரநாத் தனது வேலையை உதறினார். தனது முடிவுக்குக் காரணம் சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
வேலையை விட்ட பின்னர் டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் குடியேறினார். அங்கு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் ரவீந்தரநாத். தன்னுடைய ஆட்டோவில் முக்கிய வாசகமாக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட அரசு டாக்டர் என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
மீண்டும் நீங்கள் பணிக்கு திரும்புங்கள் என்று அமைச்சர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இதனையடுத்து டாக்டர் ரவீந்திரநாத், அமைச்சர் ஸ்ரீராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.