மகளின் ஆன்லைன் படிப்புக்காக பேஸ்ஃபுக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு இரண்டு சீட்டுகட்டுகளை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி அரசன்கழனி வேடந்தாங்கல் பகுதியில் முகமது அலி என்பவர் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பள்ளி படிக்கும் தனது மகள் ஆன்லைனில் படிக்க மொபைல் போன் தேவை என கேட்டும் கையில் போதிய பணம் இல்லாததால் செல்போன் வாங்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி 12,000 ரூபாய் மொபைல் போன் வெறும் 2,999 ரூபாய் என பேஸ்ஃபுக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ஒரு செல்போனை ஆர்டர் செய்துள்ளார்.
விளம்பரத்தை பார்த்த முஹமது அலிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்ட நிலையிலும் தனது மகள் எப்படியாவது ஆன்லைனின் படிக்க வேண்டும் என்பதற்காக மோசடி கும்பலின் விளம்பரத்தை நம்பி ஆசை ஆசையாய் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். வீட்டுக்கு வந்து டெலிவரி செய்த பின்னர் பணம் கொடுத்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடர் செய்த நான்கு நாட்கள் கழித்து சரவணன் என்பவர் செல்போனை டெலிவரி செய்ய வந்துள்ளார். டெலிவரிபாயை நிற்க வைத்து அவர் கண்முன்னே பார்சலை முகமது அலி பிரித்துள்ளார். வேகமாக பார்சலை பிரித்ததும் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. செல்போன் இருக்க வேண்டிய இடத்தில் 10 ரூபாய் மதிப்புள்ள 2 சீட்டு கட்டுகள் இருந்துள்ளது. இதை காட்டி டெலிவரிபாய் சரவணனிடம் கேட்டபோது எந்த ஒரு பதிலும் கூறாமல் அவர் அங்கிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிச் செல்ல முயற்ச்சித்துள்ளதாக கூறப்படுகிறது. டெலிவரிபாய் சரவணனை மடக்கி பிடித்த அக்கம் பக்கத்தினர் அவரை பள்ளிகரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே தங்கள் வேலை என்றும் பார்சல் எங்கிருந்து வந்தது என தெரியாது என்றும் டெலிவரி பாய் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விபரங்களை பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.