கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காசார்கோடு மாவட்டத்தில், டாடா குழுமத்தின் சார்பில் கட்டப்பட்ட கொரோனா பிரத்யேக மருத்துவமனையை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் இரண்டும் பொதுமக்களின் நலனுக்காக இணைந்து உருவாக்கிய இந்த திட்டத்திற்காக டாட்டா நிறுவனத்திற்கு நன்றி கூறினார்.
காசார்கோடு, தெக்கில் கிராமத்தில் மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பில் 80 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ரூ.60 கோடி செலவில் 5 மாதங்களிலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 551 படுக்கைகள் மற்றும் 36 வெண்டிலேட்டர்கள் கொண்ட இந்த மருத்துவமனை டாடா நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 1400 படுக்கைகள் கொண்ட கொரோனா முதல்வரிசை சிகிச்சை மையம் திரிச்சூர் மாவட்டம் நட்டிகாவில் திறக்கப்பட்டுள்ளது.
இதில் படுக்கைகள், இ-ரோபோட்ஸ், டெலி மெடிசின், உணவு பரிமாற இ-பைக்குகள், பயோ – மருத்துவ திடக்கழிவு மேலாண்மை உட்பட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. லுலு நிறுவனத்தின் எம்.ஏ. யுசூப் இதை உருவாக்கியுள்ளார்.