பதினோரு மாத தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து கோபம் தலைக்கேறிய ஐந்து வயது குழந்தை குற்றவாளியான சம்பவம் பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற மகளும், 11 மாத வயது ஹேமஸ்ரீ என்ற கைக்குழந்தையும் உள்ளனர். ஹேமஸ்ரீ பிறந்தது முதல் இரண்டாவது மகள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததாக நிர்மலா எண்ணத் தொடங்கினாள்.
தங்கை மீது தன்னுடைய பெற்றோர் அதிக பாசத்துடன் இருப்பதை பார்த்த நிர்மலாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தங்கையை தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்கத்து கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணவில்லை. ஹேமஸ்ரீயை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த பெற்றோர் அவளை வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இறுதியில் ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தனர். எனவே தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று அக்கா நிர்மலா அப்பாவியாக கூறினாள்.
நிர்மலா கூறியதை கேட்டு பெற்றோர் மட்டுமே அல்லாமல் போலீசாரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிர்மலா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முடிவில் உள்ளனர்.
11 மாத குழந்தை மீது பெற்றோர் காட்டும் அதீதமான கவனிப்பு எதனால் என்பதை அறியாத சிறுமி இத்தகைய முடிவுக்கு வந்தது யாரால்? பொதுவாகவே இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது முதல் குழந்தை தன் மீது உள்ள கவனம் திசை திரும்பி விட்டதாக எண்ணுவது இயல்பு. அதனை புரியவைக்கும் கடமை பெற்றோருக்கும் உள்ளது.