நாசிக்கில் 30 வயதைத் தாண்டிய ஒரு நபர் வங்கிக்குள் நுழைந்து பெண் அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். வங்கி அதிகாரிகள் அவரைத் தடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் மதியம் 1.30 மணியளவில் எம்.ஜி ரோட்டில் அமைந்துள்ள ஐடிபிஐ வங்கியில் நடந்துள்ளது. அந்த நபரின் பெயர் அமர் போட்கே எனவும், அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் எனவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
சர்கார்வாடா காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த் சோம்வான்ஷி இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த நபர் கையில் கத்தியுடன் வங்கிக்குள் நுழைந்து ஒரு பெண் அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.
வங்கி அதிகாரிகள் அவரிடம் பேசி பெண்ணின் கழுத்திலிருந்து கத்தியை எடுக்கவைத்து, பின்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் பார்வை குறைபாடு உள்ளவர் என்றும், அதனால் அவர் உயிர்வாழ 10 லட்சம் ரூபாய் தேவை என்றும் கேட்டு மிரட்டியதாக ஒத்துக் கொண்டுள்ளார்.
இதுபற்றி ஐடிபிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில், ”நாசிக்கில் உள்ள ஐடிபிஐ வங்கிக்கிளையில் ஒரு அதிகாரியை கத்திவை வைத்து ஒரு மனிதன் மிரட்டியுள்ளான். அலுவலக அதிகாரி மற்றும் பணியாளர்களின் சாதுர்யத்தால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஐடிபிஐ தனது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் அக்கறைகொள்ளும்” என பதிவிட்டுள்ளது.