இளம் பெண் தற்கொலை வழக்கில் பிரபல நடிகை தலைமறைவாகி விட்டதை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாட்டத்தில் உள்ள கொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஸி (24).
இவரும் அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் காதலித்து வந்தனர். இது இரண்டு பேர் குடும்பத்துக்கும் தெரிய வந்தபோது, சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது
இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். ஒன்றாக அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஹாரிஸுக்கு வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை கேட்டு வந்துள்ளனர். சொத்து மற்றும் பண ஆசையில் மயங்கிய ஹாரிஸ், ராம்ஸியுடனான உறவை முறித்தார்.
திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த ராம்ஸி, கடந்த வியாழக்கிமை தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்தபோது இந்த தகவல்கள் வெளியானது. இதையடுத்து ராம்ஸியின் காதலர் ஹாரிஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் போலீசார் மேலும் விசாரணையை தொடங்கினர். ஹாரிஸின் சகோதரர் மனைவி லட்சுமி பிரமோத். இவர் பிரபல மலையாள டிவி நடிகை. ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இவரும் தற்கொலை செய்துகொண்ட ராம்ஸியும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இருவரும் இணைந்து டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகை லட்சுமி பிரமோத்திடமும் அவர் குடும்பத்தினரிடமும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரித்த மறுநாளில் இருந்தே நடிகையும் அவர் குடும்பத்தினரும் செல்போனை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நடிகை லட்சுமி பிரமோத் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாரிஸூடன் நெருக்கமாக இருந்த ராம்ஸி, கர்ப்பமாகி உள்ளார். அவரைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் லட்சுமி பிரமோத். இதற்காக மருத்துவமனையில் கொடுப்பதற்காக, போலியான திருமண சான்றிதழை ஏற்பாடு செய்து கொடுத்தாராம் லட்சுமி பிரமோத். இதுகுறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராம்ஸி குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். டிவி நடிகை தலைமறைவான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.