மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாளை (செப்.,13) நாடு முழுதும் நடக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுத் 1.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ல் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பிரச்னை காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
நாடு முழுதும் 16 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 1.17 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். அவர்களில், தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 14 நகரங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன.
மாணவர்கள் முகக் கவசம் அணிவதன் வழியே விதிமீறல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால், அவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிய முக கவசம் வழங்கப்படலாம்.
தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, அரசின் பயிற்சி பெற்றவர்களை ஒருங்கிணைத்து, தேர்வு மையங்களுக்கு அழைத்து வர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு.. வழிகாட்டுதல்கள்.!
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நீட் தேர்விற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால், தேர்வர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும்.
வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே, தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
இயல்பை விட, கூடுதலாக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வு நடைபெறும்.
தேர்வர்கள் சானிடைசர், குடிநீர் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
முகக் கவசம் மற்றும் கையுறைகள் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க, ஆதார் எண், கைரேகை உள்ளிட்ட விவரங்கள் கட்டாயமாக சோதிக்கப்படும்.
நீட் தேர்வை நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட 78,058 பேர் கூடுதலாக எழுத உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 16,724 பேர் குறைவாக எழுத உள்ளனர்.