ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை…..
கிராம மக்கள் சாலை மறியல், பதற்றமான நிலையால் போலீஸ் குவிப்பு…..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடி பகுதியில், புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக இறந்தார்.
இராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளராக பதவியில் இருந்தார்.
முதுகுடி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டுள்ளது
இதில் தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் ராஜலிங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யபட்டார். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜலிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த ராஜலிங்கம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராஜலிங்கம் வெட்டப்பட்டதைக் கேள்விப்பட்ட முதுகுடியைச் சேர்ந்த பொதுமக்கள் ராஜபாளையம் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், சுமார் இரண்டு மணி நேரமாக சாலை மறியலை கைவிடாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவம் கேள்விப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பதட்டமான சூழ்நிலை இருப்பதால் ராஜபாளையம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி : ரவிச்சந்திரன் மதுரை