சிவகங்கை அருகே தூக்கிட்டு கொள்வது போல் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் எதிர்பாராத விதமாக கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திரவியம். கூலி தொழிலாளியான இவர் செல்ஃபி பிரியர் என கூறப்படுகிறது.
தற்போது இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், தனது உறவினர் வயலில் அறை அமைத்து தங்கி, ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் செல்ஃபி எடுத்துள்ளார். அதனை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்
இதுபோல் 2 முறை செல்பி எடுத்து விட்டு, 3வது முறையாக செல்பி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கயிறு இருக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாக்கோட்டை போலீசார் திரவியத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த திரவியத்திற்கு அடிக்கடி வலிப்பு நோய் இருந்து வந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.