நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4 மாத கால ஊரடங்கால் இந்தியா கொரோனா வைரஸின் கொடூரப் பரவலில் இருந்து தப்பித்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், கொரோனா வைரஸ் குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அறிக்கையை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியளவில் உலகம் முழுவதும் 200 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தன. பின்னர் செப்டம்பர் 11 நிலவரப்படி 250 நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 2.79 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச கொரோனா இறப்பு விகிதம் 3.2% என்றளவில் உள்ளது.
இந்தியாவில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 76,000 பேர் இறந்துள்ளனர். 77.65% பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியால், இந்தியா இந்த பெருந்தொற்று நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்திருக்கிறது.
10 லட்சத்தில் எத்தனை பேர் மரணம் என்ற கணக்கின் அடிப்படையில் உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4 மாத கால ஊரடங்கால் இந்தியா கரோனா வைரஸின் கொடூரப் பரவலில் இருந்து தப்பித்துவிட்டது. இந்த 4 மாத ஊரடங்கு தான் நாடு முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், படுக்கை வசதியைப் பொறுத்தவரை 36.3 மடங்கு வசதி அதிகரிக்கப்பட்டிறுக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதியும் 24.6% அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் நிர்வாகத் திறன் காரணமாகவே கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கொரோனா தடுப்பில் அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். சர்வதேச விமான நிலையங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளை எடுத்துரைத்தார்.