ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சஜ்ஜீவ். இவருடைய மனைவி ரீனா.
கடந்த 8-ந் தேதி இரவு சஜ்ஜீவின் வீட்டுக்குள் தலையில் குல்லாய் மற்றும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திபுதிபுவென புகுந்தது. உடனே அந்த கும்பல் தங்கள் கையில் இருந்த அரிவாள், கம்பு மற்றும் இரும்பு கம்பியால் ரீனாவை தாக்கி 13 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
ரீனாவின் அலறல் சத்தம் கேட்டு பாலமுருகன், அவருடைய மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.
அந்த கும்பல் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் அவர்கள் 2 பேரையும், சஜ்ஜீவ்வையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
உடனே சஜ்ஜீவ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இஇந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (25) என்பவரை கைது செய்தனர்.
என்ஜினீயரிங் முடித்து உள்ள இவர் சத்தியமங்கலம் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட பிரகாஷ், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ‘தன்னுடைய அண்ணன் திருமணத்துக்காக கடன் அதிக அளவில் வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும்,’ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 பவுன் நகை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட 9 பேரும் சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.